சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நல்லம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (31). இவர், திருப்பத்தூர் அருகே மதகுபட்டியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்காக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் மதகுபட்டிக்கு திரும்பியுள்ளார். அப்போது, திருப்பத்தூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரளிக்கோட்டையைத் தாண்டி சென்றுகொண்டிருந்த இவர், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.