சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திருக்காளப்பட்டியில் செவ்வாய்க்கிழமை விவசாயியின் வீட்டைத் திறந்து ஏழரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
சிங்கம்புணரி அருகே திருக்காளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜேந்திரன் (66). விவசாயியான இவர், தனது வீட்டின் முன்புள்ள வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இவரது மனைவி 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்றுவிட்டதால், ராஜேந்திரன் காலை 11 மணி அளவில் ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டுக் கதவின் சாவியை தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு சென்றுவிட்டாராம். இதையறிந்த மர்ம நபர், தலையணைக்கு கீழிருந்த சாவியை எடுத்து திறந்து, பீரோவில் இருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட ஏழரை பவுன் நகைகளை திருடிவிட்டு, சாவியை மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
இது குறித்து எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.