இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.
இந்த முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா தலைமை வகித்தார். அவரிடம் அளித்த மனு விவரம் : இளையான்குடி ஒன்றியம், புதுகோட்டை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பஞ்சனூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இக்கிராமத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லை. மேலும், அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்டவையும் செய்து தரப்படவில்லை. இதனால், குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து ஊராட்சி செயலர் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையயும் எடுக்கப்படவில்லை.
எனவே, எங்கள் கிராமத்துக்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.