சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள பாவனக்கோட்டை மோயன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (46). இவர், தேவகோட்டையில் இருந்து காலை 10 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். மாரிச்சான்பட்டி என்ற இடத்தில், தேவகோட்டை அருகே உள்ள தாணீச்சாவூரணியைச் சேர்ந்த சோனையன் மகன் கணேசன் (38) வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பால்ராஜிடமிருந்த ரூ.1500 ஐ பறித்துக்கொண்டார்.
இதையடுத்து உடனடியாக பால்ராஜ் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் போலீஸார் கணேசனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.