சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 9) பொது விநியோக குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
அந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட பொது விநியோக திட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் கிராமங்கள் : சிவகங்கை வட்டம்
இடையமேலூர், மானாமதுரை வட்டம் செய்களத்தூர் சமத்துவபுரம், இளையான்குடி வட்டம் கரும்புக்கூட்டம், காரைக்குடிவட்டம் ஆத்தங்குடி, தேவகோட்டை வட்டம் கண்டதேவி, திருப்பத்தூர் வட்டம் நேமம், திருப்புவனம் வட்டம் வயல்சேரி, காளையார்கோவில் வட்டம் நாட்டரசன்கோட்டை, சிங்கம்புணரி வட்டம் கிருங்காக்கோட்டை.