மக்களவைத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்து தரக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆன் லைனில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவைப்படும் உதவி மற்றும் தகவல்களை பெற்று பயன்பெறும் வகையில் person with disabilitys (பெர்ஷன் வித் டிஷ்அப்ளிட்டிஸ்) எனும் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களது மாற்றுத்திறனின் தன்மை குறித்து மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்து கொள்ளவும், ஏற்கெனவே இடம் பெற்றுள்ள பெயரினை உறுதி செய்யவும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இவை தவிர,சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தேர்தல் நாளன்று சக்கர நாற்காலிகள் மற்றும் தங்களது தேவைகள் குறித்து மேற்கண்ட செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் வசதிகள் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும்,பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார் மற்றும் கருத்துகளை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800-425-7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தும், தெரிந்தும் பயன் பெறலாம்.
இவை தவிர,1950 என்ற கட்டணமில்லா எண்ணையும் பயன்படுத்தி தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.