எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு காரைக்குடி வழியாக புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதற்கு காரைக்குடி தொழில்வணிகக்கழகம் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவர் சாமி.திராவிடமணி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கேரளா மாநிலம் எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணிக்கு புதிய சிறப்பு ரயில் (எண்: 06015) வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் இயக்கப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஒருநாள் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஏப். 6 இல் எர்ணாகுளத்தில் காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். காரைக்குடிக்கு இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு வரும்.
மறுமார்க்கத்தில் ஏப்.7-ஆம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு(வண்டி எண்: 06016) இரவு மணி 11.20-க்கு காரைக்குடிக்கும், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளமும் சென்றடையும்.
இந்த ரயில் வரும் ஜூன் மாதம் 29-ஆம் தேதிவரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பு கிடைக்கப்பெற்றால் நிரந்தரமாக இந்த ரயில் இயக்கப்படலாம் என்று ரயில்வேத்துறை சார்பில் தெரியவருகிறது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார்.