சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என, அப்பகுதி பொதுமக்கள் திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், முதுவன்திடல் கிராமத்தில் ஊராட்சி செயலராக பாலகுரு என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், திருப்பாச்சேத்தி கிராம ஊராட்சி செயலர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். சமீபத்தில், திருப்பாச்சேத்தி கிராம ஊராட்சி செயலர் பொறுப்பிலிருந்து பாலகுரு விடுவிக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக, பாப்பாகுடியில் ஊராட்சி செயலராக பணியாற்றி வரும் முத்துராமலிங்கம் என்பவர் திருப்பாச்சேத்தியை கூடுதலாகக் கவனிக்க, அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த திருப்பாச்சேத்தி பொதுமக்கள், பாலகுருவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கோரி, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை மனுவை கார்த்திகாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.