தேவகோட்டையில் தனது சித்தியையும், தம்பியையும் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அம்மச்சி ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராமன். தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு, இரண்டு மனைவிகள். இதில், முதல் மனைவி கல்யாணி இறந்துவிட்டார். இவருடைய மகன் மகன் பாலசுந்தர் (28). இவரது இரண்டாவது மனைவி பழனிமுத்து (41). இவருடைய மகன் மனோஜ் (18), தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சுப்புராமன் தனது மூத்த மகன் பாலசுந்தரத்திடம் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளார். ஆனால், சமீப காலமாக சுப்புராமன் பாலசுந்தரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாராம். இதனால் விரக்தியடைந்த பாலசுந்தரம், இதற்கு தனது சித்தி பழனிமுத்து தான் காரணமாக இருக்கக்கூடும் எனக் கருதியுள்ளார்.
இதனால் பாலசுந்தரம், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த பழனிமுத்தையும், மனோஜையும் வீடு புகுந்து அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் அலறியசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் பாலசுந்தர் தப்பித்து சென்றுவிட்டாராம்.
அப்பகுதியினர் அளித்த புகாரின்பேரில், தேவகோட்டை நகர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக புகாரின் பேரில் பாலசுந்தரை போலீஸார் கைது செய்தனர்.