திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கண்மாயில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அரசூரில் பெரிய கீரமங்கலம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தில் சவுடு மண் எடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் தடையில்லாச் சான்று வழங்கி உள்ளார். இந்த சான்றின் மூலம் அந்த நிலத்தின் அருகே உள்ள பெரிய கீரமங்கலம் கண்மாயில் சுமார் 25 அடிக்கு ஆழமாக தோண்டி மணலை கடத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சனிக்கிழமை மாலை சம்பவ இடத்துக்கு போலீஸாருடன் சென்று டிஎஸ்பி பார்வையிட்டார். அப்போது கண்மாயில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து கண்மாயில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 டாரஸ் லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.