சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அமமுக கட்சியினர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவித்துள்ளதை அடுத்து,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் முதன் முதலாக தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் கொடி கம்பம் அமைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த சரவணன், பூமி மற்றும் விஜயமூர்த்தி ஆகிய 3 பேர் மீது காளையர்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோன்று, கோளந்தி என்னும் கிராமம் அருகே உள்ள அரசு சுவரில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் குறித்த சுவர் விளம்பரம் எழுதி இருந்ததாக அக்கட்சியின் இளைஞரணி இணைச் செயலர் கோதண்டபாணி மீது சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.