ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின் மாற்றியில் சனிக்கிழமை ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பல மணிநேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மின் துணை நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மாற்றியில் உள்ள ஆயிலை மின்வாரிய ஊழியர்கள் சனிக்கிழமை பிற்பகல் மாற்றினர். இதற்காக அப்போது மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் மின் விநியோகத்தை வழங்க முயன்ற போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் பிற்பகல் 3 மணி முதல் மின் விநியோகம் தடைபட்டது. இந்த பழுதை சீரமைக்க பரமக்குடியில் இருந்து மின்வாரிய தொழில் நுட்பப்பிரிவு ஊழியர்கள் வந்து, சீரமைப்பு பணியை தொடங்கினர்.
இரவு வரை ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி ராமேசுவரம் வந்த பக்தர்களும் அவதிக்குள்ளாயினர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் மாற்றியில் தொழில் நுட்ப பணி சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றார்.