குடிநீர் வசதி செய்து தரக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபனிடம் புலவர்சேரி
கிராமப் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனு விவரம்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூர் அருகே உள்ள புலவர்சேரி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு செயல்பட்டு வந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் ஆழ்துளைக் கிணற்று மோட்டார் மற்றும் சிறு மின் விசைப் பம்பு (சின்டெக்ஸ்) ஆகியன கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புலவர்சேரி கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.