திருவிழா முடிந்து ஒரு மாதமாகியும், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா, கடந்த மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாயமங்கலம் வந்திருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
கடந்த மாதமே திருவிழா முடிந்துவிட்ட நிலையில், ஒரு வாரமாக இக்கோயிலில் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலி கொடுத்தும், பொங்கல் படைத்தும், அக்கினிச் சட்டி, ஆயிரங்கண் பானை ஏந்தியும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி முத்துமாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.