சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
By DIN | Published On : 06th May 2019 12:55 AM | Last Updated : 06th May 2019 12:55 AM | அ+அ அ- |

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
சிவகங்கையில் கடந்த 2012 இல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து தினசரி உள் மற்றும் வெளிநோயாளிகளாக சுமார் 2500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, நோயாளிகள், உடன் வருபவர்கள் மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக வருபவர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நோயாளிகள் பயன்பெறும் வகையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே இரு இடங்களிலும்,பொதுப் பிரிவு பகுதியில் ஒன்றும் என 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும்,மருத்துவமனையின் பிற பகுதிகளான வெளிநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்பட ஏராளமான சிகிச்சைப் பிரிவுகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து, இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் வந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் சில நேரங்களில், அங்கும் தண்ணீர் வராத நிலை உள்ளது. இதனால், வெளியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.25-க்கு வாங்கி அருந்துவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
போதிய குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதியடைந்து வருவதாக பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்து தர வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.