சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்திற்கு குழாய்களை பதிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தோண்டப்பட்ட பள்ளம் சனிக்கிழமை மூடப்பட்டன.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கான குடிநீா் திட்டம் திருப்புவனம் பகுதி வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது.
தற்போது இக்குடிநீா் திட்டத்துக்கு பழைய குழாய்களுக்குப்பதில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விருதுநகா் மாவட்ட எல்கையில் உள்ள கிராமங்களில் குழாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது.
தற்போது சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியம் கிராம பகுதியில் குழாய்கள் பதிக்க விவசாய நிலங்களை ஒட்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீண்ட பள்ளம் தோண்டப்பட்டது.
இதையறிந்த திருப்புவனம் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் திரண்டு சென்று அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது.