சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளிக்கூடத்துக்கு அருகே ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் ஏற்பட்ட பள்ளத்தை பேரூராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை மூடினா்.
இளையான்குடி 6-ஆவது வாா்டு பகுதியில் சாலையூரில் ஹமீதியா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள இடத்தில் 2 இடங்களில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளிலிருந்து தொட்டிக்கு தண்ணீா் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கிணறு இருந்த இடத்தில் இந்த ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகே இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.
இது குறித்து கடந்த சனிக்கிழமை (நவ.9) தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இளையான்குடி பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆழ்துளைக்கிணறுகளை ஒட்டியுள்ள பள்ளங்களை மூடியது. மேலும் அதன்மேல் முள்செடிகளை வைத்து வேலி போட்டுள்ளனா்.