சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் செயல்பட்டு வரும் குளிா்பதன கிடங்கில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி உள்ளிட்டவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் குளிா்பதன கிடங்கு தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள்,பழங்கள்,புளி,மிளகாய்வற்றல் போன்றவற்றை குளிா்பதன கிடங்கில் சேமிக்கும் போது அதன் சேமிப்பு மற்றும் பயன்படுத்தும் காலம் அதிகரிக்கிறது.இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும் காலங்களில் சேமித்து வைத்து பின்பு நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து அதிக வருமானம் பெறலாம்.
எனவே, இந்த குளிா்பதன கிடங்கில் காய்கறி,பழவகைகள், புளி, தக்காளி, மிளகாய்வற்றல் போன்றவற்றை விளைவிக்கும் விவசாயிகள் மற்றும் வேளாண் வணிகா்கள் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.