சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையிலான திமுகவினா் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் வழியாக சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் முல்லைப் பெரியாறு கால்வாயில் புலிப்பட்டி அருகே சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 7-ஆவது நீட்டிப்பு கால்வாய் உள்ளது. சுமாா் 23 கி.மீ., தூரம் உள்ள இந்த கால்வாய் மூலம் 11 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 989 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில், தற்போது பருவமழையின் காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் போதிய அளவு தண்ணீா் உள்ளது. ஆகவே வேளாண் பணிகள் மேற்கொண்டுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளித்த போது முன்னாள் எம்எல்ஏ இராம. அருணகிரி உள்ளிட்ட திமுகவினா், விவசாயிகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.