ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக அணுகவேண்டும். அதற்கு புத்தகங்களை துணை கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டம் சார்பில் காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான 2-ஆவது புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து ஆட்சியர் பேசியதாவது: அறிவியலால் தான் இந்த உலகம் வளர்ச்சி அடைந்தது. சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு அறிவியலால் தீர்வு காண முடியும். நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு கூடுதலாக கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும் இயற்கையைப் பாதுகாப்பதற்கு மரங்களை வளர்ப்பதில் முக்கியத்துவம் வழங்கவேண்டும். அறிவியல் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறது. அதனை முழுமையாக நாம் பயன்படுத்தவேண்டும். அதிக அளவு காடுகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். அதற்குப் புத்தகங்களை துணை கொள்ளவேண்டும். அதற்கான சிறப்பு நிகழ்வாக இப்புத்தகக்கண்காட்சி அமைந்திருக்கிறது என்றார். துவக்க விழாவில், வரவேற்புக் குழுத்தலைவர் சி. மாதவன் தலைமை வகித்துப் பேசினார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, மாவட்டச்செயலர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.பாலுமுத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ். தினகரன், மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இப்புத்தகக்கண்காட்சியில் பல்வேறு முன்னணி பதிப்பகங்களைச் சேர்ந்த 35 அரங்குகள் அமைக்கப்பட்டு அனைத்து வகையான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும் இக் கண்காட்சிக்கு அனுமதி இலவசமாகும். தொடக்க விழாவையொட்டி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற புத்தகப் பேரணியை காரைக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் பி. அருண் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக புத்தகக் கண்காட்சி அரங்கில் நிறைவடைந்தது.
விழாவில் முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் ஆர். ஜீவானந்தம் வரவேற்றுப்பேசினார். மாவட்ட இணைச் செயலர் பி. செந்தில்குமார் நன்றி கூறினார்.