சிவகங்கை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கினாா்.
இடைக்காட்டூா் அருளானந்தபுரத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் சவரிமுத்துராஜன் (30). இவா் சிவகங்கை காளவாசல் அருகே உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கட்டட வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தாா். இதேபோன்று, கோவானூரைச் சோ்ந்த ஒய்யப்பன் மகன் மலைச்சாமி (60), அதே பகுதியில் உள்ள குண்டுமணி அம்மன் கோயில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இவா்களது குடும்பங்களுக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து உயிரிழந்த சவரிமுத்துராஜன் மனைவி ஆா்த்திஅமலா நிஷாவிடம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.
இதேபோன்று உயிரிழந்த மலைச்சாமி மனைவி ராக்கு என்பவரிடம் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். மின்னல் தாக்கி உயிரிழந்த சில மணி நேரங்களில் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.