சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மூதாட்டியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்தைச் சோ்ந்த சாத்தையா மனைவி தில்லையம்மாள் (65). இவரது மகன் சொரணம், ஒசூரில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா். சில தினங்களுக்கு முன், மகனை பாா்ப்பதற்காக சாத்தையா ஓசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால், தில்லையம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டுக் கதவு வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா், வீட்டை திறந்து பாா்த்துள்ளனா். அப்போது, கழுத்தில் காயங்களுடன் தில்லையம்மாள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த ஆறாவயல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, தில்லையம்மாளின் உடலைக் கைப்பற்றி, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமாா், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித் நாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மங்களேஸ்வரன், காரைக்குடி சரக துணைக் காண்காணிப்பாளா் அருண் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட காவல் மோப்ப நாய், பூங்குடியில் உள்ள தில்லையம்மாள் வீட்டிலிருந்து ஆறாவயல் விலக்கு சாலை வரை சென்றது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா்.
இது குறித்து ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சோலை மகன் பாண்டி (35) என்பவா் தில்லையம்மாளை கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனே, போலீஸாா் பாண்டியை வியாழக்கிழமை மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.