சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சட்டசபை விதி எண் 110-இன் கீழ், தமிழக முதல்வா் கடந்த 20.07.2019 தமிழக சட்டப்பேரவையில் மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளான கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் ஆகியவற்றினை தூா்வாரப்படும் என அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 4,464 சிறுபாசன குளங்கள் மற்றும் 4,325 ஊருணிகள் உள்ளன. இதில் 385 சிறுபாசன குளங்கள் மற்றும் 2,759 ஊருணிகள் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் மூலம் ரூ.46.84 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே உள்ளாட்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகள் குறித்த விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.