"ஆசிரியர்களின் சேவையை நினைவு கூறும் கடமை அனைவருக்கும் உண்டு'
ஆசிரியர் தினவிழாவில், அனைத்து ஆசிரியர்களின் சேவையை நாம் நினைவு கூறக்கடமைப்பட்டவர்கள் என்று அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
அனைவரது அறிவுக்கண்களையும் திறப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால் சமூகத்தில் மதிக்கப்படக்கூடியவர்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். ஆசிரியர்களின் மதிப்பையும், மாண்பையும் உயர்த்தியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனாவார்.
ஆசிரியர்கள் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் தான். அனைத்து ஆசிரியர்களின் சேவையை நாம் நினைவு கூற கடமைப்பட்டவர்கள் என்றார்.
விழாவில், கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.சிவசுப்பிரமணியன் ஆசிரியர் தின பேருரை யாற்றினார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்துறையில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய எஸ். எஸ். தினகரனை பாராட்டி துணைவேந்தர் கௌரவித்தார். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா.குருமல்லேஷ் பிரபு வரவேற்றுப்பேசினார். முடிவில் பேராசிரியர் உதயசூரியன் நன்றி கூறினார்.