சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழாய்வில், வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டறியப்பட்டது.
கீழடியில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம், தலைமையில் தற்போது 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, இங்குள்ள 5 பேர்களது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இதில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியனவும் கண்டறியப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை, போதகுரு என்பரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டவடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவர், இப்பகுதியில் ஏதோவொரு தொழில் நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சுவர் நீண்டுகொண்டே செல்கிறது. தொடர்ந்து இந்த சுவரை ஒட்டி குழிகள் தோண்டப்பட்டால், இதன் நீளம் மற்றும் அது எங்கு முடிவடைகிறது என்பது தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.