சிவகங்கையில் தமிழ்நாடு உதவி ஆணையர், வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு உதவி ஆணையர், வணிக வரி அலுவலர், துணை வணிக வரி அலுவலர்கள் சங்கத்தின் கோட்டத் தலைவர் சை.அக்பர் பாஷா தலைமை வகித்தார். துணை மாநில வரி அலுவலர்கள் மு. அன்புச்செல்வன், கா. நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வணிக வரித் துறை அலுவலகங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். அலுவலக வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வணிக வரித் துறையில் சுற்றும் குழு பணியில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்கும் வகையில் அரசாணையை முறைப்படுத்த வேண்டும். கடந்த 2019 ஜனவரி மாதம் ஜாக்டோ- ஜியோ நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட வணிக வரித் துறை அலுவலர்களிடமிருந்து ஊதியம் பிடித்தம் செய்ததற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு உதவி ஆணையர், வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.