காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திறந்தவெளிக் கல்வி வளங்களிலிருந்து திறந்தவெளிக் கல்விப் பயிற்சி என்ற தலைப்பிலான சர்வதேசக்கருத்தரங்கின் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் கல்வியியல் துறையின் சார்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், கல்வி ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றது. சமுதாயம் வளர்ச்சி பெறவேண்டுமென்றால் இருக்கக்கூடிய கல்வி வளங்களை நன்கு பயன்படுத்த நாம் தெரிந்திருப்பது அவசியம்.
திறந்தவெளிக் கல்வி வளங்களை நன்கு பயன்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாங்கள் பாடம் சார்ந்த அறிவோடு பிற துறை சார்ந்த பாட அறிவையும் ஒருங்கே பெறமுடியும் என்றார்.
மலேசிய நாட்டின் மலாய பல்கலைக்கழக மனிதநேய மற்றும் கல்வியியல் நிறுவன இயக்குநர் விசாலாட்சி பாலகிருஷ்ணன் கருத்தரங்கை துவக்கிவைத்துப்பேசினார். மலேசிய நாட்டின் சுல்தான் இத்திரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியர் ஆங் யங்டெக் முக்கிய உரையாற்றினார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி இணைப்பேராசிரியர் எஸ்.ரசூல் முகைதீன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்கத் தொகுப்பினை துணைவேந்தர் வெளியிட அதனை சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக கல்வியியல் துறைத்தலைவர் க. கலையரசன் வரேற்றுப்பேசினார். முடிவில் உதவிப்பேராசிரியர் ஆர். ராம்நாத் நன்றி கூறினார்.