காளையார்கோவில் அருகே பொட்டகவயல் கிராமத்தில் உள்ள தொட்டிச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு பொட்டகவயலில் உள்ள தொட்டிச்சியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, கோயில் முன்பு உள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்திருந்த காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து,வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து 9 மாடுகள் பங்கேற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். வடமாடு மஞ்சுவிரட்டின் போது காளைகள் முட்டியதில் 4 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியை, பொட்டகவயல், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.