காவிரி-வைகை-குண்டாறு ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் அம்பிகா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் மணியம்மா தொடக்கி வைத்தார். மாநிலச் செயலர் எஸ்.பூங்கோதை சிறப்புரையாற்றினார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தடையின்றி நூறு நாள் வேலையை வழங்க வேண்டும். வேலைக்கு தினசரி கூலியாக ரூ.229 வழங்க வேண்டும். குடிநீர் வசதி இல்லாத கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். 7 மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கே.தண்டியப்பன், மாவட்டப் பொருளாளர் கே.வேங்கையா, மாவட்டத் துணைச் செயலர் பி.முத்துக்கருப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.