சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் குடிநீர் ஆழ்குழாய் பழுதானதால் தண்ணீருக்கு கடந்த 20 நாள்களாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட 1வது வார்டில் உள்ளது புதுப்பட்டி. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் புதுப்பட்டி ஊருணி அருகே ஆழ்குழாய் அமைத்து அதிலிருந்து சிறிய தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன் ஆழ்குழாய் பழுதடைந்தது. பேரூராட்சி நிர்வாகம் பழுதை சீரமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் காவிரி கூட்டு குடிநீரும் குறைவாகவே விநியோகிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் புதுப்பட்டியில் ஊருணி அருகே உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் தொட்டியில் உள்ள இணைப்பில் இருந்து கசியும் நீரை பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.