சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள சலுப்பனோடை கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து வசதியை சனிக்கிழமை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சலுப்பனோடை கிராமத்துக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இக்கிராமத்துக்கு பேருந்து விட ஏற்பாடு செய்யப்பட்டது.
சலுப்பனோடை கிராமத்தில் நடந்த பேருந்து சேவை தொடக்க விழாவுக்கு தமிழக அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ் விழாவில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நடராஜன், மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மாரிமுத்து, முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நகரப் பேருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சலுப்பனோடை கிராமத்துக்கு நாள்தோறும் 3 முறை வந்து செல்லும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.