காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் தினேஷ்ராஜன், உலகப் பள்ளிகளுக்கிடையே ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 3-ஆம் பரிசு பெற்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளதையடுத்து, அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
உலகப் பள்ளிகளுக்கிடையே 17 வயதுக்குள்பட்டோருக்கான சதுரங்கப் போட்டி, ரஷ்யா அருகிலுள்ள அர்மேனியாவில் செப்டம்பர் 18 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில், புதுவயல் பள்ளி மாணவர் தினேஷ்ராஜன், இந்திய அணிக்கு தலைமை பொறுப்பேற்றுச் சென்றார். இந்திய அணியினர் இப்போட்டியில் மூன்றாமிடம் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தினேஷ்ராஜன், கடந்த ஜனவரி மாதம் ஆந்திரத்தில் நடைபெற்ற தேசிய அளவி லான சதுரங்கப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சாதனை படைத்துள்ள மாணவர் தினேஷ்ராஜனை, ஸ்ரீ வித்யாகிரி பள்ளிக் குழுத் தலைவர் கிருஷ்ணன், பள்ளியின் தாளாளர் ஆர். சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா மற்றும் முதல்வர் ஹேமமாலினி, வித்யாகிரி கல்வி குழுமங் களின் தலைமை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சுவாமிநாதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பலரும் பாராட்டினர்.