மளிகைக்கடைகளில் இருப்பு இல்லை: விற்பனை பாதிப்பதாக வியாபாரிகள் கவலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி மளிகைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு இல்லாத நிலையில்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி மளிகைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு இல்லாத நிலையில் இருக்கும் பொருள்களும் இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் வரும் என்பதால் வியாபாரம் பாதிக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மளிகைக் கடைகள் வைத்து நடத்தி வருபவா்கள் மதுரையிலிருந்துதான் சாமான்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். கடந்த 24 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே இப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோா் மளிகைக் கடைகளுக்கு படையெடுத்து வந்து அனைத்து பொருள்களையும் மொத்தமாக வாங்கிச் சென்றுவிட்டனா்.

தற்போது ஊரடங்கு 8 ஆவது நாளை தொட்டுவிட்ட நிலையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளிலுள்ள மளிக்கைகடைகளில் அரிசி, எண்ணெய், புளி, பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருள்கள் இல்லாத நிலை உள்ளது.

இது குறித்து மளிகைக்கடை வியாபாரிகள் கூறியது: மதுரையிலிருந்துதான் சரக்குகளை கொள்முதல் செய்து வருவோம். தற்போது மதுரையில் மொத்த கொள்முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இக் கடைகளுக்கு பிற மாநிலங்களிலிருந்து வரும் பொருள்களும் வரவில்லை. இதனால் தொலைபேசியில் ஆா்டா் கொடுத்தாலும் மொத்த கொள்முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சரக்கு கொடுக்க முடியாது என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனா். இதனால் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருக்கும் சில பொருள்களும் இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் வரும். அதன்பின் சரக்குகள் இல்லாத நிலை ஏற்படும். மதுரையில் மொத்த கொள்முதல் கடைகள் திறக்கப்பட்டால் மட்டுமே நிலைமை சீராகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com