சிவகங்கை அஞ்சலகக் கோட்டங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நாளை தொடக்கம்

சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்துக்குள்பட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் திங்கள்கிழமை ( ஆக. 31) தங்கப் பத்திரம் விற்பனை தொடங்க உள்ளதாக, சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் 

சிவகங்கை: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்துக்குள்பட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் திங்கள்கிழமை ( ஆக. 31) தங்கப் பத்திரம் விற்பனை தொடங்க உள்ளதாக, சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் வி. மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. அந்தவகையில், சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 4 ஆம் தேதி வரை (5 நாள்கள்) நடைபெற உள்ளது.

ஒரு தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.5,117 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வு தொகை வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலக அலுவலகத்தையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப் பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com