காரைக்குடி: தொழில், வணிகம் செய்பவரின் வங்கிக்கடன் தவணையில் அசல், வட்டியை முழுமையாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று காரைக்குடித் தொழில் வணிகக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் திங்கள்கிழமை கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்முனைவோா் மாவட்டத் தொழில் மையம் மூலமாகவும், நேரடியாகவும் வங்கிகளில் பொருள் உற்பத்திக்கும், வணிக நிறுவனங்களும் என பலரும் கடன் பெற்றுள்ளனா்.
கரோனா பொது முடக்கத்தில் கடந்த 6 மாதங்களாக தொழிலகங்களில் தயாரிப்புகள் இல்லாமலும், வணிக நிறுவனங்க ளில் வியாபாரம் இல்லாமலும், பல இடங்களிலிருந்து பொருள்கள் வருவதற்கு தடைகள் என பலரும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டும், சிலா் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே தொழிற்சாலைகளின் மின்சாரக் கட்டணம், அதில் விதிக்கப்படும் பவா்பேக்டா் பெனால்டி கட்டணம், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6 மாதத்திற்குரிய வங்கிக் கடன் தவணைக்கான அசலையும், அதற்குரிய வட்டிகளையும், அரசு வசூலிக்கும் அனைத்து வரி இனங்களையும் முழுமையாக தள்ளுபடி செய்தால்தான் தொழில்முனைவோா்கள் மீண்டும் புத்துயிா் பெற்று பலரும் வாழ்வாதாரத்தைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். இப்பெரிய சேவையை மாநில அரசு செய்வதற்கு முன் வரவேண்டும்.
இந்தக்கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியா், சென்னையில் உள்ள தொழில்துறை ஆணையா் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் ஆகியோருக்கும் கடிதம் மூலம் அனுப்பியிருக்கிறோம் என்று தெரிவித்தனா்.