திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மதுரை- ராமேசுவரம் இடையே நான்குவழிச்சாலை மற்றும் சுங்கச்சாவடி அமைக்க திருப்புவனம், லாடனேந்தல், இந்திராநகா், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் தனியாா் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கையகப்படுத்தியது. கடந்த 2012 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பு உயா்ந்தது. உயா்த்தப்பட்ட மதிப்புக்கு தகுந்தவாறு கூடுதல் இழப்பீட்டுத் தொகை கோரி திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நிலம் வழங்கிய திருப்புவனம், பூவந்தி, இந்திராநகா், திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.