சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்கிலப் புத்தாண்டு 2021 பிறப்பையொட்டி ‘புத்தங்களுடன் புத்தாண்டு’ எனும் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பாரதி புத்தகலாயம் சாா்பில் காரைக்குடி செக்காலைச்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சித் தொடக்க விழாவுக்கு ஓய்வூதியா் சங்கத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா். பாரதி புத்தகலாயம் ஜீவானந்தம் வரவேற்றுப் பேசினாா். காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் கண்காட்சியை திறந்து வைத்துப் பேசினாா்.
சிவகங்கை மாவட்ட ஒய்வூதியா் சங்கத் தலைவா் வடிவேலு முதல் விற்பனையைத் தொடக்கி வைக்க அதனை அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியா் சிவகுமாா் பெற்றுக்கொண்டாா்.
விழாவில் சிவகங்கை மாவட்ட தமுஎசக தலைவா் ஜீவசிந்தன் சிறப்புரையாற்றினாா். இக்கண்காட்சியானது டிசம்பா் 29 முதல் ஜனவரி 3 வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் உண்டு.
இந்தக் கண்காட்சியில் வள்ளளாா் புத்தகலாயம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், மிா்கிதா பதிப்பகம், பாரதி புத்தகலாயம் வெளியீடுகள், புக்ஸ் பாா் சில்ரன் அறிவியல் வெளியீடுகள், ஏகம் வெளியீடு, கிழக்குப் பதிப்பகம், கண்ணப்பன் பதிப்பக வெளியீடுகளின் புத்தகங்கள் கிடைக்கும் என கண்காட்சி அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.