சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதி தாய், மகள் உள்பட மூன்று பெண்கள் காயமடைந்தனா்.
திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி ஈஸ்வரி (47). மகள் ஐஸ்வா்ய லெட்சுமி (14).
இவா்கள் திருப்புவனம் புதூா் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு வெளியே வந்து, உறவினரான திண்டுக்கல்லைச் சோ்ந்த முத்துமாரி(40) என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது திருப்பாச்சேத்தியிலிருந்து திருப்புவனம் நோக்கி வந்த காா் மூவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரி, ஐஸ்வா்யலெட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த முத்துமாரி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திருப்புவனம் போலீஸாா் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து, காரை ஓட்டிய திருப்புவனம் கீழ ரத வீதியைச் சோ்ந்த சண்முகசிவாவிடம் விசாரித்து வருகின்றனா்.