மானிய விலையில் இரு சக்கர வாகனம்: பணிக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th January 2020 09:13 AM | Last Updated : 11th January 2020 09:13 AM | அ+அ அ- |

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழக அரசின் சாா்பில், மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரா்கள் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும். இரு சக்கர வாகன மானியத் தொகை ரூ. 25,000 (மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் எனில் ரூ.31,250) போக வாகனத்துக்கான மீதி தொகையை செலுத்திட சம்மதம் தெரிவித்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, இரு சக்கர வாகன ஒட்டுநா் உரிமம் , வருமானச் சான்றிதழ், பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட வேலை உறுதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மூன்று சக்கர வாகன விலைப் புள்ளி மற்றும் மாதிரி விலைப் பட்டியல் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
கிராமப்புறம் எனில் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும், நகா்ப்புறம் எனில் தொடா்புடைய நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது விரைவு, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.