சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இரண்டவாது முறையாக 12ஆம் தேதி முழு பொதுமுடக்கம் காரணமாக கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
சனிக்கிழமை நள்ளிரவு வரை இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் தமிழக அரசு தொற்றைக் கட்டுப்படுத்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதையடுத்து மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் கடைவீதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் பலரது வீடுகளிலும் அசைவ உணவு வகைகள் சமைக்கப்படுவது வழக்கம், முழு பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை காலை இறைச்சிக் கடைகள் திறக்கப்படாது என்பதால் சனிக்கிழமை மாலை முதல் மீன், கோழி இறைச்சிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
நள்ளிரவு வரை இந்தக் கடைகளில் விற்பனை களை கட்டியது. ஆட்டிறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை விற்பனை நடந்தது.