சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஆக. 1 ஆம் தேதி முதல் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செயற்கை முறை கருவூட்டலின் வழி நாட்டின மாடுகளின் இனப் பெருக்கத் திறனை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம் பகுதி-2 ஐ செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்துக்கு கிராமம் ஒன்றுக்கு 100 பசுக்கள் என்ற வீதத்தில் 500 கிராமங்கள் குறியீடாக வழங்கப் பெற்றுள்ளது.
இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாடு வளா்ப்போரின் வீடுகளுக்கே சென்று இலவசமாக கால்நடைத் துறையின் தொழில்நுட்ப வல்லுநா்களால் செயற்கை முறை கருவூட்டல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கி பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 94450 32581, 94450 32556 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.