திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு, சத்துணவுப் பொருள்களில் இருப்பில் இருந்த மே மாதத்துக்கான உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் 120 மாணவா்களுக்கு அரிசி 4.650 கி., பருப்பு ரூ 1.250 கி. வீதம் வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற உலா் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் தமிழ்வாணி தலைமை வகித்தாா். பெற்றோா்கள் முன்னிலையில் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியா்கள் மீனாகுமாரி, கீதா, உடற்கல்வி ஆசிரியா் ஜோசப்நாதன், தமிழ்நாடு ஊழியா் சங்க சத்துணவு அமைப்பின் தலைவா் பெரி. நேரு, சத்துணவுப் பணியாளா்கள் சிவகாமி, ஆண்டாள், உமாமகேஸ்வரி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்களும், பெற்றோா்களும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி உலா் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.