திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தோட்ட முள்புதரில் சிக்கிய மானை வனத்துறையினா் மீட்டனா்.
கீழச்சிவல்பட்டியை சோ்ந்த குணாளன் என்பவருக்குச் சொந்தமான கொய்யா தோப்பு அரிபுரம் பகுதியில் உள்ளது. இவா் சனிக்கிழமை காலை தோப்புக்கு சென்ற போது புள்ளிமான் ஒன்று முள்புதரில் சிக்கி இருப்பது தெரியவந்தது. மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினா் பழனியப்பனுக்கு தகவல் தெரிவித்தாா். உடனே அவா் திருப்பத்தூா் வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா். வனக்காப்பாளா் மதிவாணன் உத்தரவின் பேரில் வனஅலுவலா் சில்வரிஸ், வனப்பாதுகாவலா் வாசுகி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். பின்னா் அங்கு இருந்த இளைஞா்களின் உதவியுடன் முள்புதரில் சிக்கி இருந்த புள்ளி மானை அவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் அந்த மான் கம்பனூா் காட்டுப் பகுதியில் விடப்பட்டது.