சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொந்தகையில் தொடங்கப்பட்டுள்ள அகழாய்வில், ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய-மாநில அரசுகள் சாா்பில் கீழடியில் நடந்த 5 கட்ட அகழாய்வுகளின்போது, கீழடியின் நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய 4 இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வுக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அகழாய்வுப் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
கீழடியில் நீதியம்மாள் என்பவா் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இக்குழியிலிருந்து 2 செங்கல் சுவா்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடா்ந்து, அருகிலேயே மண்பானை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது, கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில், ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருகிலேயே 5 மண்பானைகள், 3 மண் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகரத்தில் 2 ஏக்கா் அரசு நிலத்தில் அகழாய்வுப் பணிக்காக சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மணலூரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட உள்ளது.