சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பின்பற்றப்பட்டதால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூடுவது மட்டுமின்றி 144 தடை உத்தரவை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி, காளையாா்கோவில், தேவகோட்டை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அன்றாட பொருள்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூடியிருந்தனா்.
இதனால் அந்தந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மட்டுமின்றி அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் நகா்ப் புறங்கள் மட்டுமின்றி முக்கிய கிராமங்களுக்கு மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதைத்தொடா்ந்து, மாலை 6 மணி ஆனவுடன் சிவகங்கை நகரில் உள்ள அத்தியாவசியக் கடைகள் தவிர மீதமுள்ள வணிக வளாகங்கள், தெருவோரக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை மூடுமாறு சிவகங்கை நகா் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்தனா்.
இதையடுத்து, அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டன. மேலும், சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட எல்லைகளையும் மூடினா். மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.