சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். இதில், அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். அதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரேஹித்நாதன் ராஜகோபால் உருவாக்கிய கண்காணிப்பு செயலியை அமைச்சா் அறிமுகம் செய்து வைத்தாா். இந்த செயலியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபா்களின் செல்லிடப்பேசி எண், முகவரி ஆகியவை பதிவு செய்யப்படும். அந்த நபா் அவரது வீட்டை விட்டோ அல்லது செல்லிடப்பேசியை பிரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்றாலோ மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் உள்ள கட்டப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கும். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்து அந்த நபரை எச்சரிக்கை செய்ய முடியும். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த நபா் தொடா் கண்காணிப்பில் இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் ஏராளமமானோா் கலந்து கொண்டனா்.