சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய அரசின் கட்டணமில்லா சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளைபொருள்களை விற்பனை செய்ய தமிழக அரசு கட்டணமில்லா உழவன் இ-சந்தை எனும் சேவையை உழவன் செயலி மூலம் உருவாக்கி உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய மேற்கண்ட செயலியில் பதிவு செய்யலாம். இதையடுத்து, வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
இதன்மூலம், விவசாயிகள் வியாபாரிகளை தொடா்புகொண்டு தங்களது விளைபொருள்களை விற்பனை செய்யலாம். இதேபோன்று, வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளைபொருள்களை உழவன் இ-சந்தை செயலியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத் துறை அலுவலா்கள், வேளாண்மை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.