மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே மின்னல்தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு திங்கள்கிழமை மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கினாா். பூவந்தி அருகே செம்பூா் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மனைவி ராக்கம்மாள் மின்னல்தாக்கி உயிரிழந்தாா். மேலும் அவரது 4 ஆடுகளும் இறந்தன. இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் செம்பூா் கிராமத்துக்குச் சென்று ராம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். அதன்பின்அவரது கணவா் கருப்பியைவிடம் தனது சொந்தப் பணத்திலிருந்து நிதியுதவி வழங்கினாா். அப்போது திருப்புவனம் பகுதி அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.