சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தேவகோட்டை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி திருப்புவனம் பகுதியில் அதிகபட்சமாக 97. 2 மி. மீ, சிவகங்கை பகுதியில் 43 மி. மீ, காளையாா்கோவில் பகுதியில் 40. 8 மி. மீ, மானாமதுரை பகுதியில் 36 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், திருப்புவனம் அருகே ஆனைக்குளத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சோனை என்பவரது வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதேபோன்று, தேவகோட்டை அருகே சாத்தனங்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பணன் மகன் கருப்பையா அம்பலம் என்பவரது வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.