சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைத்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்துப் பேசியது: சிவகங்கை மாவட்டத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையைப் பொருத்து கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே வாக்குப்பதிவு மையங்கள் மறுசீரமைப்பு குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் களப்பணி மேற்கொள்ளும் தோ்தல் அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இதில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) சண்டீஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கலுவன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.